மென்செஸ்டர் சிட்டி முகாமையாளருக்கு மீண்டும் கௌரவம்

லீக் முகாமையாளர்கள் சங்கத்தின் இவ்வாண்டுக்கான சிறந்த முகாமையாளராக மென்செஸ்டர் சிட்டி கழகத்தைச் சேர்ந்த பெப் குவாதியோலோ தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

ஸ்பெய்னைச் சேர்ந்த பெப் குவாதியோலோ தலைமையில் கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்றாவது முறையாகவும் இங்கிலாந்து பிறிமியர் லீக் சாம்பியன் பட்டத்தை மென்செஸ்டர் சிட்டி கழகம் வெற்றிகொண்டிருந்தது.

கரபாவ் கிண்ண கால்பந்தாட்ட சாம்பியன் பட்டத்தை வெற்றிகொண்ட மென்செஸ்டர் சிட்டி கழகம், சாம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டியில் செல்ஸி கழகத்தை எதிர்கொள்ளவுள்ளது.

இதற்கு முன்னர் 2017 – 2018 ஆம் ஆண்டு காலப் பகுதியில் லீக் முகாமையாளர்கள் சங்கத்தின் சிறந்த முகாமையாளருக்கான விருதை பெப் குவாதியோலோ பெற்றிருந்தார்.

சக கழக முகாமையாளர்கள் வாக்களித்ததன் மூலம் இந்த விருது தமக்கு கிடைக்கப்பெற்றமை விசேடமான ஒன்றெனவும் உயர்ந்த நிலையில் உள்ள தொழில்முறை வீரர்களே இதனை சாத்தியமாக்கினார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.